ஆருத்ரா கோல்டு மோசடி: விசாரணை வளையத்தில் ஆர்.கே.சுரேஷ்
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.25 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதனால் பொதுமக்கள் பலரும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் ரூ.2,438 கோடியை மோசடி செய்தனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது.
பொதுமக்களிடம் முறைகேடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் ரூ.96 கோடி மதிப்பிலான சொத்துக்களை காவல்துறையினர் முடக்கினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பாஸ்கர், மோகன் பாபு, பட்டாபிராம், ரூசோ, ஐயப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
கடந்த வாரம் பாஜகவைச் சேர்ந்த விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தவழக்கில் தற்போது திடீர் திருப்பமாக நடிகரும் பாஜக கலை பிரிவு நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ என்பவரை கடந்த டிசம்பர் மாதம் காவல்துறையினர் கைது செய்து அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடியே 40 லட்சத்தை முடக்கினர்.
இவர் ஒயிட் ரோஸ் என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.
இதனால் ஆர்.கே.சுரேஷிற்கும் ரூசோவிற்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆர்.கே.சுரேஷின் உதவியை ரூசோ நாடியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் ரூசோவிடம் நடத்திய விசாரணையில், ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கை மத்திய பாஜக அரசின் உதவியுடன் முடக்குவதற்காக ஆர்.கே.சுரேஷிடம் ரூ.12 கோடி கொடுத்துள்ளதாகவும் பணத்தை பெற்றுக்கொண்ட ஆர்.கே.சுரேஷ் இடைத்தரகர்கள் உதவியிடன் வழக்கை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முயன்ற போது ரூசோ கைதான தகவல் தெரிந்ததும் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு தப்பி சென்றது தெரியவந்தது.
ஆர்.கே.சுரேஷை தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து சிக்குவது அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
கே. டி. ராகவனை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்