உத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் மீட்பு… நலம் விசாரித்த ஸ்டாலின்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக அரசு இன்று (செப்டம்பர் 15) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“உத்தரகாண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் தாவாகாட் பகுதியின் அருகில் சிக்கினர். இதுகுறித்து தகவல் பெறப்பட்ட உடன் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்புகொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு. மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள 30 தமிழர்கள் காயம் ஏதுமின்றி, அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை முகாம் அலுவலகத்திலிருந்து உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, கவலைப்பட வேண்டாம், விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
யாத்திரை சென்ற தமிழர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். உத்தரகாண்ட் அரசால் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் துவங்கப்பட்டு, முகாமில் உள்ள 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தர்சுலா நகரத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. தர்சுலாவிலிருந்து புறப்பட்ட மீட்கப்பட்ட பயணிகள் டெல்லி வந்தடைந்த பின்னர் விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சீதாராம் யெச்சூரி திருவுருவ படத்திற்கு ஸ்டாலின் மரியாதை!
“அமைச்சர் அன்பில் மகேஷ் நல்ல மனிதர்” – மகாவிஷ்ணு வாக்குமூலம்!