ஆவின் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் சத்தமில்லாமல் விற்றுவிட போகிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளதாக இன்று (செப்டம்பர் 1) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கோவையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக 136 பால் முகவர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மளிகைக் கடைக்காரர்களுக்கே நேரடியாக உரிமத்தைக் கொடுக்கப்போவதாகவும், மளிகைக் கடைகளுக்கு கொடுக்கக்கூடிய உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்போவதாக கோவை ஆவின் பால் பொது மேலாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் 6 மாதத்திற்கு மேலாக தொழிலாளர் பிரச்சனை நிலவி வருகிறது.
இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விநியோகத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. இதனால் பால் முகவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம்.
வேலூர் மாவட்டத்தில், சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணையில் தொழிலாளர் பிரச்சனை காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியாகியும் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பால் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தொடர்ச்சியாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் ஆவின் நிர்வாகத்திடம் தெரிவித்து வருகிறோம்.
ஆனால், இந்தப் பிரச்சனை தீர்ப்பதற்கு ஆவின் நிர்வாகமோ, பால் வளத்துறையோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
இதையெல்லாம் பார்க்கும்போது, ஆவின் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் சத்தமில்லாமல் விற்றுவிட போகிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.
ஒருவேளை இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக பால்வளத்துறை ஈடுபட்டால், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கூட்டமைப்பு தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும்.
ஒரு லிட்டர் பாலில், முகவர்களுக்கு ஒரு ரூபாய் தான் லாபம் கிடைக்கிறது. இதனால் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகை அடிப்படையிலேயே சில்லரை வணிகர்களுக்கு மளிகை கடைகளில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்கிறார்கள்.
இதனால் நுகர்வோர்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை நிர்ணயத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து உழைப்பிற்கேற்ற ஊதியத்தை முகவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பலமுறை நாங்கள் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளோம்.
இந்தநிலையில், ஆவின் நிர்வாகம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்போவதாக பொதுமேலாளர் கூறியிருப்பது நிச்சயமாக நெருப்பில்லாமல் புகையாது.
ஒருவேளை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஆவின் நிர்வாகத்தை ஒப்படைத்தால் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் கபளீகரம் செய்து விடுவார்கள். தமிழக முதல்வர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்வம்
மின்சாரத்தை அடுத்து ஆவின் தயிர், நெய் விலை உயர்வு! வலுக்கும் எதிர்ப்பு!
நாடு நாசமாகிப்போவது நிச்சயம். யாருடைய வம்சம் தழைக்க / செழிக்க இவர்களெல்லாம் விளக்கு பிடித்து ஆட்சி செய்கிறார்கள் என்று புலப்படவில்லை…
மின்னம்பலத்தை ரிலையன்ஸ் ₹50000 (₹ஐம்பதாயிரத்துக்கு) வாங்குவதாக செய்தி வெளிவருகிறதே. உண்மையா?
இது என்ன விபரீதம்.