மூர்த்தி Vs உதயகுமார்: மதுரையை மையம் கொள்ளும் கல்யாண அரசியல்!
அதிமுக ஆட்சியில் கனிமவளத் துறை, வணிகவரித் துறையில் நடைபெற்ற புள்ளிவிவரங்கள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் மூர்த்திக்கு சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடந்த அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமணம் குறித்து பேசியிருந்தார்.
இதற்கு அமைச்சர் மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 1) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளையும், மதுரையில் திமுக அமைச்சர் நடத்திய ஆடம்பர திருமணத்தைப் பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேசியதில் என்ன தவறு இருக்கிறது?
ஆனால் அதற்கு அமைச்சர் மூர்த்தி அரசியல் நாகரீகம் இல்லாமல் தரம் தாழ்த்திப் பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல. 4ம் தர மனிதரைப்போல நீ, போ, வா என்று அமைச்சர் பேசியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு, பேசுவதற்கு தார்மீக கடமை உண்டு. நீங்கள் நடத்திய ஆடம்பர திருமணத்தை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவர்.
உலை வாயை மூடலாம், ஆனால் ஊர்வாயை மூட முடியாது. மூன்று கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டீர்கள்.
மக்களுக்கு திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. அம்மா உணவகம், மடிக்கணினி, தாலிக்கு தங்கம் உள்ளிட்டவற்றுக்கு நிதி பற்றாகுறை என்று கூறப்படுகிறது.
ஆனால் அமைச்சர் மூர்த்தி தற்போது ஆடம்பரமாக திருமணத்தை நடத்தியுள்ளார். மதுரையில் எந்த அமைச்சர் குடும்பத்திலும் இதுபோன்று ஆடம்பரமாக திருமணம் நடக்கவில்லை. இதில் எடப்பாடியார் பேசுவதில் எந்த தவறும் இல்லை.
அமைச்சர் மூர்த்தி பழையதை நினைத்துப் பார்க்க வேண்டும். எங்கள் ஆட்சியில் கனிமவளத் துறை வணிகவரித் துறையில் நடைபெற்ற புள்ளிவிவரங்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க நான் தயார்.
கடந்த ஒன்னறை ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா? கடந்த நான்கு ஆண்டுகாலத்தில் எடப்பாடியார் அனைவரையும் அரவணைத்துச் சென்றார். எடப்பாடியாரிடம் உதவி கேட்காதவர்கள் யாரும் கிடையாது.
அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி எடப்பாடியார் கூறியது தவறு என்றால், நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாமே? உங்களுக்கு தயக்கம் ஏன்?
நாங்கள் எதற்கும் பின்வாங்க போவதில்லை. ஆடம்பர திருமணம் என்பது ஊரே அறிந்த விஷயம், எதிர்க்கட்சி தலைவருக்கு யாரும் எழுதிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் தலைவரைப்போல் குறிப்பு எழுதி பேசுபவர் அல்ல. குறிப்பு இல்லாமல் 5 மணி நேரம்கூட எடப்பாடியார் பேசுவார். அமைச்சர் மூர்த்தி கனிமவளத்தை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சேவை ஆற்றினீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
ஒரு அமைச்சராக இருந்துகொண்டு, மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்த திருமணம் பற்றி நியாயம் கேட்க எதிர்கட்சி தலைவருக்கு தார்மீக உரிமை உண்டு,
அரசியல் நாகரீகம் கருதி இதுபோன்ற, அநாகரிகமான முறையில் பேசுவதை அமைச்சர் மூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் பேசினால் உங்களைப் பற்றி வெட்டவெளியில் பேச தயங்க மாட்டோம். அதற்காக நீங்கள் பழிவாங்கும் நடவடிக்கை கையில் எடுத்தாலும் அதற்கு அஞ்சமாட்டோம்.
மதுரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரை வைத்து 120 ஜோடி ஏழை, எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம். ஆனால் நீங்கள் முதலமைச்சரை அழைத்து உங்கள் வீட்டு திருமணத்தை நடத்தியுள்ளீர்கள்.
நாங்கள் நடத்தியது நாட்டு மக்கள் திருமணம். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் திருமணத்தை நடத்தவில்லை. ஆனால் நீங்கள் நடத்தியது உங்கள் வீட்டு மக்கள் திருமணம்.
ஜல்லிக்கட்டு விழாவை முதன்முதலில் ஒரு முதலமைச்சர் பச்சைக்கொடி அசைத்து துவக்கிவைத்தார் என்றால், அது எடப்பாடியாரையே சாரும்.
ஏன் நீங்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அப்போது முதலமைச்சரை அழைத்து வந்திருக்கலாமே? ஜல்லிக்கட்டு விழாவிற்கு சாப்பாடு போட்டோம் என்று கூறுகிறீர்கள். இதே கொரோனா காலத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
அதிமுகவில் யாரையும் நான் பிரித்து பார்க்கவில்லை – சசிகலா
சாதாரண இந்து -சனாதன இந்து: வட இந்தியாவை வியக்கவைக்கும் ஆ.ராசா பேச்சு!