ராமநாதபுரம் : ஓ.பன்னீர்செல்வம் வாக்குகளை கைப்பற்றினார்களா ‘ஓபிஎஸ்’கள்?

Published On:

| By christopher

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த சிட்டிங் எம்.பி நவாஸ் கனியும், அதிமுக சார்பில் ஜெயப்பெருமாளும் போட்டியிட்டனர்.

அதே வேளையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக சுயேச்சை வேட்பாளராக களம் கண்டார்.

எனினும் இதனை பயன்படுத்தி அவர் பெயரில் உள்ள 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவரின் வேட்புமனு தவிர மீதமுள்ள ஐந்து பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

ஒரே பெயரில் 6 பேர் போட்டியிட்டதால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

மதியம் 12 மணி நிலவரப்படி திமுக கூட்டணியில் களம் கண்ட நவாஸ் கனி 91,268 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஓ. பன்னீர்செல்வம் 51,137 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் 20,958 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார்.

அதே வேளையில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ் பெயரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஓச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் – 563, மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் – 421, ஓய்யாத் தேவர் மகன் பன்னீர்செல்வம் – 298, ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் – 216, ஓச்சத்தேவர் மகன் பன்னீர்செல்வம் – 105 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : ஆட்சியை இழக்கிறாரா ஜெகன் மோகன் ரெட்டி?

நடிகை ஷாலினி பெயரில் போலி கணக்கு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share