கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஏற்கனவே பாதயாத்திரையின் போது அவர் அணிந்திருந்த டி ஷர்ட்டின் விலை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய பாதிரியார் ஒருவரை அவர் சந்தித்து பேசியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரியில் பாதிரியார் ஜான் பொன்னையா உள்ளிட்ட பாதிரியார்களைச் சந்தித்த ராகுல் காந்தி அவர்களுடன் உரையாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ஏசு கிறிஸ்து கடவுளா அல்லது கடவுளின் மகனா என அவர் கேள்வி எழுப்பும் காட்சி பதிவாகியுள்ளது.
ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த பாதிரியார்கள் ஏசு கிறிஸ்து கடவுள் தான் என்றும் அவர் மனித உருவில் பிறந்ததாகவும் விளக்கமளித்தனர்.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஏற்கனவே இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட பின்னணியை கொண்டவர். இதனால் அவரை ராகுல் காந்தி சந்தித்ததற்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை 18-ம் தேதி அருமனையில் நடந்த பாதிரியார் ஸ்டான் சுவாமியின் நினைவஞ்சலி கூட்டத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். பின்னர் மதுரை கருப்பாயூரணியில் நடந்த வாகனத் தணிக்கையின்போது அவரை கைது செய்தனர்.
இது மட்டும் அல்லாமல் திமுக-வின் ஆட்சி கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை என்று பேசியது, திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கோயில்களுக்கு செல்வதை விமர்சித்தது என பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஜார்ஜ் பொன்னையா.
இந்நிலையில் அவரை ராகுல் காந்தி சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜார்ஜ் பொன்னையா போன்றவர்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை தூண்டியவர்கள் என விமர்சித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவர் தரக்குறைவாக பேசியிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னுடைய ஒற்றுமை நடைபயணத்தின் போது பிரிவினைவாதிகளை சந்திப்பதை மட்டுமே ராகுல் முதல் நோக்கமாக வைத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். இது நாட்டை ஒற்றுமைப்படுத்தும் ஜோடோ யாத்திரையா அல்லது பிளவுபடுத்தும் தோடா யாத்திரையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்துல் ராஃபிக்
நீட் விலக்கு: ராகுல் காந்தியிடம் அனிதா குடும்பத்தினர் மனு!