கர்நாடக மாநிலத்தில் கடந்த மே பத்தாம் தேதி நடந்த தேர்தல் முடிவுகள் இன்று (மே 13) வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று அங்கே ஆட்சி அமைக்கிறது.
காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் காலை முதலே தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் வெடிகள் வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர தலைவர் ராகுல் காந்தி இன்று பிற்பகல் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
கூடியிருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ராகுல் காந்தி அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
”முதலில் கர்நாடக மாநில மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகா தேர்தலில் ஒரு தரப்பு பெரு முதலாளிகளுடன் நின்றது.
இன்னொரு தரப்பு அதாவது காங்கிரஸ் கட்சி மக்கள் சக்தியை நம்பி நின்றது. இந்த தேர்தலில் மக்கள் தங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அதனால் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வெறுப்பு கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. அன்புக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மக்களுக்கு நானும் எங்கள் மாநில தலைவர்களும் கொடுத்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதை நிறைவேற்றுவோம்” என்று உறுதி கொடுத்தார் ராகுல் காந்தி.
மகளிருக்கு இலவச பேருந்து, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பத்து கிலோ அரிசி,
பெண்களுக்கு உதவித் தொகை இரண்டாயிரம் ரூபாய், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் ஆகிய முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை தேர்தல் பரப்புரையின்போது காங்கிரஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
–வேந்தன்
’குட் நைட்’: பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
கர்நாடகா தேர்தல் ரிசல்ட்: பாஜக சொல்வது என்ன?