ராகுல் காந்தி எம்பியாக பதவி வகித்த கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இன்று(ஏப்ரல் 11)’வாய்மையே வெல்லும்’ என்று எழுதப்பட்டிருந்த வாகனத்தில் பேரணி சென்றார்.
பேரணியில் ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து வயநாடு தொகுதியில் உள்ள கல்பெட்டா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் என்ன என்று பலமுறை நான் சிந்தித்து இருக்கிறேன். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். எனது எம்பி பதவி பறிக்கப்படலாம். அதே நேரம் பாஜகவால் நான் மக்கள் பிரதிநிதியாக தொடர்வதை தடுக்க முடியாது.
மக்களின் தேவை என்ன என்பதற்காக போராடுபவரே உண்மையான மக்கள் பிரதிநிதி. எம்பி என்பது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் ஒரு தகுதி தான். வயநாட்டுக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்காக நான் குரல் கொடுத்து இருக்கிறேன். சுதந்திரமான நாட்டில் வாழ வேண்டும் என்பதே வயநாடு மற்றும் இந்திய மக்களுடைய நோக்கம்” என்றார் ராகுல் காந்தி.
தொடர்ந்து பேசிய அவர், “வெறும் 4, 5 பேருக்கு மட்டும் சொந்தமாக இருக்கும் நாட்டில் யாருமே வாழ விரும்ப மாட்டார்கள். என் வீட்டுக்கு போலீசாரை அனுப்புவதன் மூலம் என்னை பயமுறுத்த முடியாது.
என்னுடைய வீட்டை அபகரிப்பதன் மூலம் என்னுடைய நிம்மதியை கெடுக்க முடியாது. பாஜக அரசு எனது வீட்டை பறித்தாலும் நான் அதை பற்றி கவலைப்பட மாட்டேன். பாஜக மக்களவை பிளவுபடுத்துவதுடன் மக்கள் மத்தியில் மோதலை உண்டாக்குகிறது.
பல ஆண்டுகளாக பாஜகவை எதிர்த்து போராடி வருகிறோம். பாஜகவிற்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன்.
நான் ஒவ்வொரு சமூகத்தையும், மதத்தையும் மதிக்கிறேன். தற்போது இரு வகையான சமூக கண்ணோட்டங்களுக்கு இடையில் மோதல் நடக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக போராடுவேன் என உறுதியளிக்கிறேன்” என்று கூறினார் ராகுல் காந்தி.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நண்பர் என்று சொன்னதிலேயே மகிழ்ச்சியடைந்தேன்: சசிகுமார் நெகிழ்ச்சி!
தோழமைக் கட்சிகளுடன் உறவு: சோனியா அறிவிப்பு!