மதுரையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்சியில் இன்று (செப்டம்பர் 4) பங்கேற்ற ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவை வழிநடத்துவதில், பெரும் பொறுப்பும் கடமையும் உள்ளது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எட்டுவழிச் சாலை திட்டத்தை திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்த்தார்கள். இன்றைக்கு எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ஆதரிக்கிறார்கள்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் எட்டு வழிச்சாலை திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 6 பேர் விடுதலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, தமிழ்நாடு அரசு நினைத்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என்று சொன்னவர்கள், இன்று வாய் மூடி மெளனமாக இருக்கிறார்கள்.
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராக தனது இல்லத்தின் முன்பு, மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். இன்றைக்கு கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை திறந்து வருகிறார்.
சொத்து வரி, மின்சார கட்டணங்கள் தமிழகத்தில் உயர்ந்திருக்கிறது. தமிழக அரசின் நிர்வாகம் மொத்தமாக ஸ்தம்பித்து போயுள்ளது.
அதிமுகவினர் அனைவரும் இன்றைக்கு அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருமனதாக அதிமுக வெற்றிக்கு உழைப்பதற்கு தயாராக உள்ளனர். அதிமுக ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என்று நீதிமன்றமே உத்தரவிடுள்ளது.
” என்ற அவர், சசிகலா ஒற்றுமை என்று ஒரு வார்த்தை ட்வீட் பதிவில் குறிப்பிட்டிருந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நன்றி வணக்கம் , நன்றி வணக்கம், நன்றி வணக்கம்” என்று மூன்று முறை கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பிலிருந்து கிளம்பினார் ஆர்.பி.உதயகுமார்.
செல்வம்
அதிமுக முதல் அமெரிக்க அதிபர் வரை: ட்ரெண்டிங்கில் ஒரு வார்த்தை ட்விட்!