விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போல் வெளியான ஆடியோவை ஆளுநரிடம் சமர்ப்பிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரைக்கு சென்றுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது மதுரை விமான நிலையத்தில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து பேசிய அவர், “இது போலியானதா, இல்லையா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்று கூறி அந்த ஆடியோவை ஊடகங்களுக்கு போட்டு காண்பித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “30 ஆயிரம் கோடி ரூபாய் என்பது சாதாரண விஷயமல்ல. அவர் அறிக்கைவிட்டதன் பிறகுதான் இதில் ஏதோ சமாச்சாரம் இருக்கிறது என தோன்றுகிறது. இது அவருடைய குரல் தான். 30 ஆயிரம் கோடியை எங்கு வைப்பது என முழித்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசிடம் விசாரணை நடத்த வற்புறுத்துவோம். ஆளுநரிடம் இதை கொண்டுபோய் சமர்ப்பிப்போம். ஏனென்றால் நிதியமைச்சரே பேசியிருக்கிறார். போலியானதா இல்லையா என ஆய்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் ஏன் இன்னும் முதல்வர் அறிக்கை வெளியிடவில்லை.
முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படியெல்லாம் வழக்குப்போட்டு பழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் 2 ஆண்டில் 30 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கிறார்கள் என்றால் நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் 3 ஆண்டு காலம் இருக்கிறது எவ்வளவு கொள்ளையடிப்பார்கள். அவர்கள் தான் வாழ முடியும். வேறு யாராலும் வாழ முடியாது. வலைதளங்களில் இப்படி செய்தி பரவும் போது இது தொடர்பாக முதல்வர் ஆய்வு செய்ய உத்தரவு போட வேண்டும் என்றார்.
பிரியா