டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்த் குருபூஜை… பாஜகவோடு இணைகிறதா தேமுதிக?

Published On:

| By Minnambalam Login1

வைஃபை ஆன் செய்ததும் விஜயகாந்த் குருபூஜை பற்றிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் அறிவிப்பு இன் பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“வருகிற டிசம்பர் 28ஆம் தேதி தேமுதிக நிறுவனரும் நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

உடல் நலம் இன்றி தொடர் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் கடந்த 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.

அவருடைய உடல் கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆனால் அங்கே கடுமையான கூட்டம் திரண்டதால் முதலமைச்சர் ஸ்டாலின் தலையீட்டின் பேரில், விஜயகாந்த் உடல் இறுதி அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. தீவுத்திடலில் அனைத்து கட்சி தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவு திடலுக்கு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், ‘விஜயகாந்த் பற்றி மோடி ஐயா மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறார்’ எனக் குறிப்பிட்டார்.

விஜயகாந்த் மறைந்த சில தினங்களிலேயே அவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. அப்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, ‘இந்த விருதை அவர் வாழும் போதே அளித்திருக்கலாமே?’ என்று கூட கருத்து வெளியிட்டிருந்தார்.

விஜயகாந்த் மறைந்த தினங்களில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி திருச்சியில் புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார். அந்த விழாவில் பிரதமர் பேசும்போது விஜயகாந்தை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினார். அது மட்டுமல்ல அரிதிலும் அரிதாக பிரதமர் மோடி தனது பிளாக்கில் விஜயகாந்த் பற்றி நீண்டதொரு கட்டுரையை எழுதினார்.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதற்கு விஜயகாந்த் மிக முக்கியமான சக்தியாக செயல்பட்டார் என அந்த கட்டுரையில் மோடி நினைவு கூர்ந்து இருந்தார்.

இந்தப் பின்னணியில் விஜயகாந்த் மறைந்து இதோ ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில்… அவருக்கு கோயம்பேட்டில் அமைந்திருக்கும் கேப்டன் ஆலயத்தில் குருபூஜை நடத்தப்பட இருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல இந்த குருபூஜை நிகழ்வுக்காக அனைத்து கட்சி தலைவர்களையும் அழைப்போம் என்றும் அவர் அறிவித்தார். அதன்படியே டிசம்பர் 23ஆம் தேதி சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விஜயகாந்த் குருபூஜைக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் பல கட்சித் தலைவர்களையும் தேமுதிக பிரதிநிதிகள் சந்தித்து விஜயகாந்த் குருபூஜைக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையில் தேமுதிக நிர்வாகிகள் இடத்தில் ஒரு தகவல் தீயாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

‘விஜயகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையானாலும் அரசியல் வாழ்க்கையானாலும் அனைத்து சாதி மதத்தினருக்கும் பொதுவானவராக இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது நினைவு நாளை குருபூஜை என பெயர் சூட்டி கேப்டன் ஆலயத்தில் ஒரு பெரிய ஆன்மீக நிகழ்ச்சி போல பிரேமலதா திட்டமிடுகிறார். இதுவே பிரேமலதா ஒரு அஜெண்டாவுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

குருபூஜை என்றால் இதுவரை பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்படும் தேவர் குருபூஜை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். மேலும் குருபூஜை என்பதற்கு சில வரையறைகளும் உள்ளன. ஆனால் விஜயகாந்த் குருபூஜை என்று பெயர் சூட்டி இதற்கு ஒரு ஆன்மீக முத்திரை குத்துகிறாரோ பிரேமலதா என்ற சந்தேகம் எழுகிறது.

இதுவரை விஜயகாந்துக்கு தாங்கள் செய்த புகழாரங்களை சுட்டிக்காட்டி பாஜக தரப்பிலிருந்து பிரேமலதாவுக்கு ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது விஜயகாந்த் என்ற சக்திமிக்க தலைவரை இந்த தேசத்துக்காக பயன்படுத்த வேண்டுமானால், தேமுதிகவை பாஜகவுடன் இணைத்து விடுங்கள். அப்படி தேமுதிகவை பாஜகவோடு இணைத்து விட்டால் விஜயகாந்த் புகழுக்கு மேலும் பல நியாயங்களை பாஜக ஆட்சி செய்யும்’ என்பதுதான் அந்த அழுத்தம்.

சமீபத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஒரே இரவில் தனது கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்து விட்டார். அதேபோல தேமுதிகவையும் பாஜகவில் இணைத்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பமாக உள்ளது. அதற்காகத்தான் பிரேமலதாவுக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தரப்பட்டு வருகின்றன.

ஆனால் பிரேமலதா இயல்பில் சுதந்திரமான மனோபாவம் கொண்டவர். அவர் யாருக்கும் எளிதில் அடிபணிபவர் அல்லர். விஜயகாந்த் இருக்கும்போதே தேமுதிக, கடுமையான வாக்கு வங்கி சரிவை சந்தித்த போதும், அவருக்குப் பிறகு கூட இதில் எந்த
முன்னேற்றமும் இல்லை என்ற நிலையிலும், தேமுதிக என்ற கட்சியை அவர் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

ஆனாலும் பிரேமலதா எதிர் கொண்டிருக்கிற சில பொருளாதார நெருக்கடிகளை சரி செய்யவும், பாஜகவில் அவருக்கு நல்ல பதவியை வழங்கவும் ஆஃபர் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் தேமுதிகவை பாஜகவுக்குள் இணைத்து விஜயகாந்தின் புகழை பாஜக தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த தொடர்ந்து முயற்சி செய்கிறது என்று தேமுதிக நிர்வாகிகள் இடையிலேயே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்
லைன் போனது வாட்ஸ் அப்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுமா? வானிலை அப்டேட்!

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி ரத்து: ஓர் ஆழமான அரசியல்!

அல்லு அர்ஜுனிடம் 3 மணி நேரமாக தொடரும் போலீஸ் விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel