“காலியானது” : பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்?
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்க்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.பதவியை இழந்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதில் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும், அதன்மூலம் மீண்டும் எம்.எல்.ஏ.வாக ஆவேன் என பொன்முடி கூறி வந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொன்முடி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தாலும், அவரது தொகுதியான திருக்கோவிலூர் காலியானதாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
தொகுதி காலியானதாக அறிவித்தால்தான் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இதுதொடர்பாக சபாநாயகர் சார்பில் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதப்பட வேண்டும்.
இந்நிலையில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரிடம் கடந்த மார்ச் 1ஆம் தேதி மனு அளித்தனர்.
இந்தசூழலில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக இன்று (மார்ச் 5) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குச் சட்டப்பேரவைச் செயலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்களவைத் தேர்தல் தேதியோடு திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு தொகுதி காலியானால் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு கிடைத்த வருமானம் இதுதான்: சந்தோஷ் நாராயணன்
ஹன்சிகாவின் ‘கார்டியன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!