ஒரு காவலரே தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை இருப்பதை முதல்வர் எப்போது உணர்வார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தன்னுடைய 10 வயது மகள் பிரதிஷாவிற்கு 3 வயது முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளைக் கடந்த 5 வருடங்களாக பிரதிஷா உட்கொண்டு வந்த நிலையில், பக்கவிளைவு காரணமாக வலது கால் பாதத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பிரதிஷாவிற்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கால் கருகிப் போனதோடு, உடலில் உள்ள ரத்தம் கெட்டுப்போனதாக கூறி கோதண்டபாணியின் அனுமதி இல்லாமல் டையாலசிஸ் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிரதிஷா கோமா நிலைக்கும் சென்றுள்ளார். இதனால் நேற்று (ஏப்ரல் 13) மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலகம் முன்பு மகளுடன் சுட்டெரிக்கும் வெயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவரை உடன் இருந்த காவலர்கள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததற்காக போலீஸ் அதிகாரியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சிறு பிள்ளையின் சிகிச்சையில் அரசு மெத்தனம் காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறு பிள்ளையின் மருத்துவ சிகிச்சை என்பது கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டியது, அதிலும் நமக்காக இரவு பகலாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு காவலரின் குழந்தைக்கு இன்னும் கவனத்துடன் இந்த அரசு செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் நிர்வாகத் திறனற்ற இந்த அரசு இதிலும் மெத்தனம் காட்டி இருப்பது வருந்தத்தக்கது. பெண் பிள்ளைகளுக்குச் சுகாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தமிழ்நாடு திணறி வருவதையும் , ஒரு காவலரே தெருவில் இறங்கிப் போராட வேண்டிய நிலை இருப்பதையும் , நம்பர் ஒன் முதல்வர் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் இந்த முதல்வர் எப்போது உணர்வார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மோனிஷா
திருச்சி மாநாடு… ஓபிஎஸ் அழைப்பு: சசிகலா பதில்!
அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை!
அடுத்த லிஸ்ட் இதுதான்: அண்ணாமலை