உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிரானது என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்தது.
இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் இதற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், தனிநபர் என உச்ச நீதிமன்றத்தில் 30 வழக்குகள் தொடரப்பட்டன.
3 : 2 விகிதத்தில் தீர்ப்பு!
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
இதில், உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
எனினும் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் மட்டும் இட ஒதுக்கீடு செல்லாது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
சமூக நீதியை சிதைக்கும் தீர்ப்பு !
இதற்கிடையே பாமக வழக்கறிஞர் பாலு, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர், “இது சமூகநீதியின் அடிப்படை கோட்பாட்டிற்கு இந்த தீர்ப்பு எதிரானது. இந்தியா முழுவதும் இருக்க கூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வேண்டும் என்று போராடி பெற்ற இடஒதுக்கீட்டை தட்டி பறிக்ககூடியதாகவும், சிதைக்க கூடியதாகவும் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
இந்தியாவில் முன்னேறிய வகுப்பில் எத்தனை சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எத்தனை சதவீதம் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் என்ற அடிப்படை தரவு இல்லாமல் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்கள் எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள்,
எந்த அடிப்படையில் மத்திய அரசு முடிவுக்கு வந்தது என்ற கேள்வியை மத்திய அரசிடம் கேட்க உச்சநீதிமன்றம் தவறியது.
முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று கூறுவது அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை கோட்பாட்டிற்கு எதிரானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணி 50 சதவிகிதம் மட்டுமே முடிந்துள்ளது: அன்புமணி
தொடரும் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்!