2030-ம் ஆண்டு… 50 சதவீத எரிசக்தி உற்பத்தி: ஜி20 மாநாட்டில் பிரதமர் உரை!
சவாலான காலங்களில் இந்தியா இந்தோனேசியாவுடன் துணையாக நின்றது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று (நவம்பர் 14) புறப்பட்டுப் பாலி நகருக்குச் சென்றார்.
இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம்போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கின்றார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 15) மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், “காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் என அனைத்தும் சேர்ந்து உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகளுக்கு ஏற்கனவே வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் நெருக்கடி மிகவும் கடுமையானது. அதைக் கையாள்வதற்கான நிதி திறன் அவர்களுக்கு இல்லை.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஐ.நா. போன்ற பல தரப்பு நிறுவனங்கள் தோல்வியடைந்து உள்ளன என்பதை ஒப்புக் கொள்ள நாம் தயங்கக் கூடாது.
அவற்றில் பொருத்தமான சீர்திருத்தங்களைச் செய்யத் தவறிவிட்டோம். கொரோனா தொற்று நோயின்போது இந்தியா தனது 130 கோடி குடிமக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. அதே நேரத்தில் பல நாடுகளுக்கு உணவு தானியங்களும் வழங்கப்பட்டன.
உணவுப் பாதுகாப்பின் அடிப்படையில் உரங்களின் தற்போதைய பற்றாக்குறை மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளது. இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவு நெருக்கடியாகும். உரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் விநியோக சங்கிலியையும் நிலையானதாகவும் உறுதியுடனும் பராமரிக்கப் பரஸ்பர ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியா இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. நிலையான உணவுக்காகத் தினை போன்ற சத்தான மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை மீண்டும் பிரபலப்படுத்தி வருகிறது.
உக்ரைனில் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை பாதைக்குத் திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். கடந்த நூற்றாண்டில் 2-ம் உலகப் போர் உலகில் அழிவை ஏற்படுத்தியது.
அதன்பிறகு அக்கால தலைவர்கள் அமைதியின் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டார்கள். இப்போது அது நமது முறை. கொரோனா காலத்துக்குப் பிறகு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது.
உலகில் அமைதி, நல்லிணக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூட்டு உறுதியைக் காட்டவேண்டியது காலத்தின் தேவையாகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.
2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். எரிசக்தி விநியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. வளரும் நாடுகளுக்குக் காலக்கெடு, தொழில் நுட்பத்தின் நிலையான வழங்கல் ஆகியவை உள்ளடக்கிய ஆற்றல் மாற்றத்திற்கு அவசியம்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெறும்போது உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியைத் தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நம்புகிறேன்” எனப் பேசினார்.
மோனிஷா
லிவிங் டு கெதரா, லவ் ஜிகாத் தா? கொலையில் புது பரபரப்பு!
ஐபிஎல் 2023: சென்னை அணியில் இருப்பவர்கள் யார்? செல்பவர்கள் யார்?