உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த பிரதமர் மோடி

Published On:

| By Kavi

உக்ரைன் – ரஷ்யப் போருக்குப் பிறகு முதன்முறையாக,  ஜி7 உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஹிரோஷிமா சென்றுள்ளார்.

இந்த நிலையில், ஜி7 மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்தது. அதன் பிறகு ஜெலன்ஸ்கியும், நரேந்திர மோடியும் நேரில் சந்திப்பது இதுவே முதன்முறை.

இந்தச் சந்திப்பின்போது, நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், உக்ரைன் பிரதமர் அலுவலக தலைவர் ஆன்ட்ரீ யெர்மாக்கும் உடன் இருந்தனர்.

முன்னதாக நரேந்திர மோடியும், ஜெலன்ஸ்கியும் தொலைபேசி மூலமாக பலமுறை உரையாடி இருக்கிறார்கள்.

போர் தொடங்கியபோது உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் நோக்கில் நரேந்திர மோடி, ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசியில் உரையாடினார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இது போருக்கான காலம் அல்ல என்றும்,

போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ராஜ்ய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

PM Modi meets Zelenskyy

இதையடுத்து, ரஷ்யாவின் நட்பு நாடாக உள்ள போதிலும், உக்ரைனுக்கும் நம்பிக்கைக்கு உரிய நாடாக இந்தியா இருப்பதை மோடி உறுதி செய்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் இந்தியா வந்த உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் எமினி ஜபாரோவா, டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்தார்.

இந்த நிலையில் இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, போருக்கு எதிராக படைகளை குறைக்க செய்வது மற்றும் அணு ஆயுதங்கள் அற்ற உலகம், அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு கிடைக்க பெறுவது ஆகிய இலக்குகளை வலுப்பெற செய்வோம்.

உக்ரைனுக்கு எதிரான நியாயம் அல்லாத, சட்டவிரோத மற்றும் எந்தவித காரணமும் இன்றி போரை தொடுத்துள்ள ரஷ்யாவின் போருக்கு எதிராக நாம் ஒன்றாக நிற்போம் என ஜி-7 நாடுகளின் தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்திருந்தனர்.

தற்போது ஹிரோஷிமா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்தோனேஷிய பிரதமர் ஜோகோ விடோடோ, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, ஜப்பான் பிரதமர் கிஷிடா, தென் கொரிய அதிபர் யோன் சுக் யோல், வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராஜ்

எவரெஸ்ட் சிகரத்தில் தமிழர்கள்: முதலமைச்சரின் உதவியும் பாராட்டுகளும்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share