ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவையடுத்து, இன்று (செப்டம்பர் 27 ) நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில்,பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.
ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்த ஷின்சோ அபே அங்குள்ள நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த போது டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோி அல்பனிஸ் உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், 100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
டோக்கியோவின் மையப் பகுதியில் உள்ள புடோகன் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெள்ளை நிற மலர் கொத்தை வைத்து, ஜப்பான் வழக்கப்படி பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி செலுத்தினார்.
கடந்த 50 ஆண்டு கால ஜப்பான் வரலாற்றில் மறைந்த தலைவருக்கு அரசு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
பின்னர், ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், ஷின்ஷோ அபே இந்தியாவுக்கு நெருங்கிய நண்பராக விளங்கியதாகவும் , அவரது மறைவால் இந்தியா மிகுந்த துயரமடைந்ததாகவும் கூறினார்.
ஜப்பான் பிரதமராக ஷின்ஷோ அபே, இந்திய – ஜப்பான் உறவை மிகப் பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்ட நரேந்திர மோடி,
தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடோவின் தலைமையும் இரு தரப்பு உறவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் ஜப்பான் மொழியில் பதிவிட்டுள்ள மோடி, ஜப்பான் பிரதமருடனான சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்ததாகவும், இரு தரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்தி நடிகைக்கு தாதா சாகேப் விருது!
குமரி அனந்தனுக்கு வீடு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்