இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விவரம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 307-வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்தப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவுஅளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
இந்த நிலையில் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்தப் போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் உக்ரைனுக்கு அதிநவீன ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 1.80பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவியால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினேன்.
ஜி20 தலைமையை ஏற்ற இந்தியா சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தேன்.
இந்த தளத்தில் தான் (ஜி20) நான் எனது அமைதி பார்முலாவை அறிவித்தேன். தற்போது அந்த பார்முலாவை அமல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் நம்புகிறேன்.
மனிதாபிமான உதவிக்கும், ஐ.நா.வின் ஆதரவுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
-ராஜ்
Comments are closed.