அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2023 ஜூன் மாதம், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒரு வருடத்துக்கு மேலான சட்டப்போராட்டத்தை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டதாக கூறும் ஒய்.பாலாஜி அவரது ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் ஒய்.பாலாஜி தரப்பில், “சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்குகளின் விசாரணையை ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் 2000 பேரை புதிதாக சேர்த்து தமிழக அரசும், போலீசாரும் பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தநிலையில் இம்மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று கூறி சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக வித்யாகுமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செந்தில் பாலாஜி வழக்கு… தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
கேரளாவின் குப்பைக் கிடங்கா தமிழகம்? – மருத்துவக்கழிவு கொண்டுவந்த லாரி பறிமுதல்!