டெண்டர் வழக்கில் வேலுமணி தாக்கல் செய்த மனு : நாளை விசாரணை!
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 21) விசாரிக்கவுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகவும் தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகலாம் என்று தெரிவித்தது.
இந்த வழக்கை நேற்று (செப்டம்பர் 20) விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை, எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு விசாரிக்கவுள்ளது.
இந்த அமர்வு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு நகலைத் தாக்கல் செய்து வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தில் இடைக்கால நிவாரணம் வழங்கத் தடை உள்ளதாகவும், வேலுமணிக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரியா
பொதுச்செயலாளர் பதவி : கையெழுத்து வாங்கும் எடப்பாடி
ராகுல் காந்தியுடன் இணைந்த சச்சின் பைலட்