கனியாமூர் பள்ளியை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,
”பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா? சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ”ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும்.
அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.
இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (நவம்பர் 15 )மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பிரியா மரணம் : “திமுக ஆட்சியில் மருத்துவத்துறை அழிந்து விட்டது” – அண்ணாமலை
தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் படிக்கவில்லையா? குஷ்பூ கேள்வி!