சம்மன்… போலீசிடம் சீமான் வாக்குவாதம்!

Published On:

| By vanangamudi

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு தமிழ்நாடு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று (பிப்ரவரி 10) காலை சம்மன் கொடுத்துள்ளனர். police send summon to Seeman

கடந்த ஜனவரி முதல் வாரம், கடலூர் மாவட்டம் வடலூரில் செய்தியாளர் சந்திப்பில் பெரியாரை பற்றி கடுமையாக விமர்சித்தார் சீமான்.

இதன் அடிப்படையில் வடலூர் காவல் நிலையத்தில் சீமான்  மீது  திராவிடர் கழக கடலூர்  மாவட்டச் செயலாளர் தண்டபாணி புகார் அளித்தார். இந்த  புகார் அடிப்படையில் 192, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு (குற்ற எண் 8/2025) செய்யப்பட்டது.  

இந்த வழக்கில் சீமானிடம் விசாரணை நடத்துவதற்காக, அவருக்கு சம்மன்  அளிப்பது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக போலீஸ் மேலிடத்தில் ஆலோசனை தீவிரமாக நடந்தது. ஈரோடு இடைத் தேர்தல் முடிவுகளும் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகிவிட்ட நிலையில்,  இன்று  (பிப்ரவரி 10) சீமானுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

மின்னம்பலத்தில் ஏற்கனவே  போலீஸ் கண்காணிப்பில் சீமான் என்ற செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படியே அவரது ,மூவ்மென்ட்டுகள் போலீஸாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உதயகுமார் மூலமாக சீமானுக்கு சம்மன் அனுப்ப முதலில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா என்பதால் அது தொடர்பான பாதுகாப்புப் பணிகள் அவருக்கு அதிகமாக இருந்தன.

இந்த காரணத்தால் நெய்வேலி  டவுன் ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகரை அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர் சுதாகர்  இன்று காலை 7.45  மணியளவில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு சம்மனோடு சென்றார்.

சீமான் அப்போது தன் வீட்டில் இருந்து திருச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். சீமான் வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் சுதாகர், தான் வந்திருக்கும் விஷயத்தை  அங்கிருந்த பணியாளர்களிடம்  சொன்னார்.

தகவல் சீமானுக்கு தெரிவிக்கப்பட்டதும் பத்து நிமிடங்களில் வெளியே வந்தார். அப்போது  அவரை சந்தித்து இன்ஸ்பெக்டர் சம்மனை அளித்தார்.

“நான் என்ன கொலையா பண்ணிட்டேன். என்ன வழக்கு இது? எதுக்கு இந்த சம்மன்?”  என்று கேட்டிருக்கிறார் சீமான்.

அதற்கு  இன்ஸ்பெக்டர்,  ‘சார்… புகாரின் பேரில் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கு, அதற்கான விசாரணைக்காகதான் உங்களை சட்டப்படி அழைத்திருக்கிறார்கள்” என்று  கூறியிருக்கிறார்.

“இந்த வழக்குக்கெல்லாம் சம்மனா?” என்று கேட்ட சீமான் முதலில் அதை வாங்க மறுத்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் சுதாகர்,   “சார்… இது சட்ட ரீதியான நடவடிக்கை. எங்க எஸ்பி உத்தரவின் பேரில் உங்களுக்கு சம்மன் சர்வ் பண்ண வந்திருக்கோம். நீங்க வந்து உங்கள் விளக்கத்தை  அளிக்கலாம்.” என்று சில நிமிடங்கள் பேசி சீமானிடம் சம்மனை அளித்து அவரிடம் கையெழுத்தும் பெற்றுக் கொண்டார்.

இந்த சம்மன்படி, வரும் பிப்ரவரி 14  ஆம் தேதி வெள்ளிக் கிழமை சீமான் வடலூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். விசாரணைக்குப் பிறகுதான் சீமான் கைது செய்யப்படுவாரா என்பது பற்றி தெரியவரும். police send summon to Seeman

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share