தான் கைப்பட எழுதிய கடித நகலை அனுமதியின்றி விநியோகித்ததாக தவெகவினர் இன்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்ட நிலையில் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பில் உள்ள குறைபாடு, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை இன்று எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தின் நகலை பிரிண்ட் எடுத்து தவெக கட்சியினர் மாநிலம் முழுவதும் வழங்கி வந்தனர்.

புஸ்ஸி ஆனந்த் உட்பட தவெக கட்சியினர் கைது!
அதன்படி தி.நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விஜய்யின் கடித நகலை பொதுமக்களுக்கு கட்சியினர் வழங்கினர்.
இதனையறிந்து அங்கு குவிந்த போலீசார், அனுமதியின்றி கடித நகலை விநியோகித்ததாக கூறி புஸ்சி ஆனந்த் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்ந்து அவர்களை விடுவிக்க கூறி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தவெகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எனினும் சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியினரை போலீசார் விடுவித்தனர். அவர்களிடம் விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
கைது செய்தது கண்டனத்துக்கு உரியது!
தொடர்ந்து காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது.
அதில், “எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர்.
ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.
கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?
இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!
அண்ணா. பல்கலை மாணவி விவகாரம் : எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி? – என்.ஐ.சி விளக்கம்!