“இந்திய அரசு பிரபாகரன் இறந்ததாக நம்பவில்லை”: பழ.நெடுமாறன்

Published On:

| By Selvam

இந்தியா மற்றும் சிங்கள அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக நம்பவில்லை என்று உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியுப் சேனலுக்கு பழ.நெடுமாறன் அளித்துள்ள பேட்டியில், “1984-ஆம் ஆண்டிலிருந்து சிங்கள ராணுவம் பிரபாகரனை கொன்று விட்டதாக 10முறை கூறியிருப்பார்கள்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மன உறுதியை குலைக்க வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் இவ்வாறு கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உடலை அரை மணி நேரத்தில் டிஎன்ஏ சோதனை செய்ததாக சிங்கள ராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்தார். அதனை மறுத்து சென்னை தடயவியல் நிலையத்தின் இயக்குனர் டாக்டர் சந்திரசேகரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

டிஎன்ஏ சோதனை என்பது அரைமணி நேரத்தில் செய்ய முடியாது. டிஎன்ஏ சோதனை செய்வதற்கு குறைந்தது நான்கு நாட்களாகும். இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்யும் வசதிஇல்லை என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரை சேர்த்துள்ளார்கள்.

ஒரு கொலை வழக்கிலோ கிரிமினல் வழக்கிலோ குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டால் மரண சான்றிதழ் கொடுத்து அவர் பெயரை நீக்கி விடுவார்கள்.

ராஜீவ் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் பிரபாகரன் பெயர் இன்னும் உள்ளது.

பிரபாகரனை கொன்று விட்டதாக கூறும் சிங்கள அரசு இன்னும் ஏன் மரண சான்றிதழ் கொடுக்கவில்லை.

இந்திய அரசு அமைத்த பல்நோக்கு விசாரணை குழு இன்னும் அந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை. இந்திய அரசும் நம்பவில்லை.

பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று நான் கூறியதால் ஈழ தமிழர்களுக்கும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு புது நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை தமிழர் பகுதியில் வசிக்கும் சிங்களர்களுக்கும் , சிங்கள ராணுவ வீரர்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான ஒரு களமாக இலங்கையை பயன்படுத்த சீனா முயற்சிக்கிறது. அதனை முறியடிக்க இந்தியா, ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ஏடிஎம்களில் கைவரிசை: ஹரியானா கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel