பரந்தூரில் ரூ 20,000 கோடி முதலீட்டில் 2028 ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பரந்தூர் புதிய விமான நிலையம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ’தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்’ என்ற தலைப்பில் தமிழக அரசு இன்று (நவம்பர் 4 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கிய செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
உறுதி செய்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்
ஏறக்குறைய 24 ஆண்டுகளாக 2வது விமான நிலைய உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்ட போதும் தற்போதுதான் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர்.
35 ஆண்டுகள் வரை சமாளிக்கலாம்
ரூ20,000 கோடி முதலீட்டில் 2028 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலையம் எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றை 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சமாளிக்கப் போதுமானதாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் போக்குவரத்து உள்ள விமான நிலையங்களில் 6 வது இடத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளது. ஒரு நாளைக்கு 400 விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.
இதன்படி ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளைக் கையாளும் அளவுக்குத்தான் இந்த விமான நிலையம் உள்ளது. தற்போது இங்கு மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளால் அதிகபட்சம் 3.5 கோடி பயணிகளைக் கையாளும் அளவுக்கே அது விரிவடையும். இந்தப் பணிகள் முடிவடைய 7 ஆண்டுகளாகும். அப்போது அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்தைக் கையாள இந்த விமான நிலையம் போதுமானதாக நிச்சயம் இருக்காது.
பயணிகள் வரத்து அதிகரிக்கும்
புதிதாக அமைக்கத் திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில் அதிக பயணிகள் பயணிக்கும் பெரிய ரக ஜெட் விமானங்களைத் தரையிறக்க முடியும். 600 பயணிகள் பயணிக்கும் பெரிய ரக விமானங்களைக் கையாளும் திறன் பெறும்போது சர்வதேச அளவிலான பயணிகள் வரத்து அதிகரிக்கும். பிற நாடுகளிலிருந்து சென்னைக்கு வர விரும்பும் பயணிகள் தற்போது பெங்களூருக்கு நேரடியாக அல்லது டெல்லியிலிருந்து சென்னைக்கோ மாறி வர வேண்டிய சூழல் உள்ளது. இதைத் தவிர்க்க முடியும்.
செலவு ரூ 100 , வருமானம் ரூ 325
இத்திட்டத்துக்கு ரூ100 செலவு செய்வதன் மூலம் மாநிலத்துக்கு வருமானமாக ரூ325 கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சென்னை தொழில் வர்த்தக சபை (எம்சிசிஐ) பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தொழில்துறை வளர்ச்சிக்கு 2 வது விமான நிலையம் அவசியம் என்பதே அவர்களது கருத்தாக இருந்தது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஹாட்ரிக் விக்கெட்: உலக சாதனை படைத்த அயர்லாந்து வீரர்!
பட்டியலினத்தவர் கோயிலுக்குள் செல்ல அனுமதி: உயர்நீதிமன்றம் அதிரடி!