அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானத்தை இன்று (ஜூலை 11) பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டது.
“கழகத்தை வழிநடத்த வேண்டிய பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கழகத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். தான் கையெழுத்திட்டுக் கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக காவல்துறையில் புகார் கொடுக்கிறார். அம்மா ஆட்சியில் அங்கம் வகித்துவிட்டு இப்போது விளம்பரம் மூலம் அம்மா ஆட்சியின் முடிவுகளை களங்கப்படுத்துகிறார்.
தொடர்ந்து கட்சிக்கு எதிராக அவர் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்… சட்டதிட்ட விதி 35 இன்படி பொருளாளர் பொறுப்பு, கழக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்க இந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் கழகத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் கழகத்தை பலவீனப்படுத்தி வரும் ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுபட்டும், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கவும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது. இவர்களுடன் கழக உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது” என்று தீர்மானத்தை நத்தம் விசுவநாதன் வாசித்ததும் பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி இதை நிறைவேற்றினார்கள்.
–வேந்தன்