‘இந்தியா’வுக்கு வெற்றியைத் தேடி தர நாங்களும் பாடுபடுகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் “முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழா இன்று (ஜூலை 25) நடைபெற்றது.
இதி்ல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்கள் பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன்.
நீங்கள் மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும். மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள நீங்கள் இனி வருங்காலத்தில் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல; இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம். எங்கள் அணியும் ‘இந்தியா’ அணிதான்! அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து- ‘டீம் ஸ்பிரிட்டுடன்’ பாடுபடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.
பாஜகவுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன.
இதனைப் பிரதமர் மோடி இன்று கடுமையாக விமர்சித்திருந்தார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளுடன் ஒப்பீடு செய்திருந்தார்.
இதற்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. நாங்கள் இந்தியா. இந்தியாவின் அடிப்படை கொள்கைகளை மணிப்பூரில் மீண்டும் கட்டியெழுப்புவோம்“ என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரும் எங்கள் அணியும் ‘இந்தியா’ அணிதான் என்று பேசியுள்ளார்.
பிரியா