“துரோகியை வீழ்த்திடுவோம்”- எம்ஜிஆர் நினைவுநாளில் ஓபிஎஸ் உறுதிமொழி!

அரசியல்

அதிகார போதையில் தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை தன்வசமாக ஆக்க நினைக்கும் துரோகியை வீழ்த்திடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி ஏற்றார்.

எம்.ஜி.ஆரின் 35 ஆவது நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணி, வைகை செல்வன், பா.வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரும் சென்றிருந்தனர்.

எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, “நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், எம்ஜிஆர் விட்டு சென்ற லட்சிய பாதையில் தடம் மாறாது, தடுமாறாது பயணிப்போம்” எனவும் உறுதிமொழி ஏற்றனர்.

இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக வந்து மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மகிழன்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர்.

பின்னர் ஓ.பி.எஸ் அணியினரும் உறுதிமொழி ஏற்றனர். அதில் “அதிகார போதையில் தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை தன்வசமாக ஆக்க நினைக்கும் துரோகியை வீழ்த்திட உறுதி ஏற்போம்.

தியாகத்தையும் தொண்டுணர்வையும் பின்னுக்குத் தள்ளி கட்சியை பிளவுப்படுத்த நினைக்கும் துரோகியை வீழ்த்திட உறுதி ஏற்கிறோம்.

கழகத்தை குறுக்கு வழியில் அபகரிக்க நினைக்கும் சர்வாதிகார கூட்டத்தை தொண்டர்கள் ஒத்துழைப்போடு ஒழித்திடுவோம்.

சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.

கலை.ரா

ஓட்டுநர் டூ கோடீஸ்வரர்: துபாயில் இந்தியருக்கு அடித்த லாட்டரி!

பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *