புதிய நிர்வாகிகள், மா.செக்களை நியமித்த ஓபிஎஸ்

Published On:

| By Kalai

அதிமுக தலைமைக் கழகம் மற்றும் மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை பூதாகரமானதில் இருந்தே கட்சி யாருக்கு என்பதில் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி தங்களுக்கு வேண்டாதவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமைக் கழக லெட்டர் பேடிலேயே அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று (செப்டம்பர் 27)ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார்.

இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தற்சமயம் வரை நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புப்படி எடப்பாடி பழனிசாமி வசம் தான் கட்சி உள்ளது.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தனது பங்குக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அதன்படி இன்று (செப்டம்பர் 28) தலைமைக்கழக நிர்வாகிகளாக 10 பேரை நியமித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏவான அ.மனோகரன், எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி ஆகியோரை கழக அமைப்புச் செயலாளர்களாக நியமித்துள்ளார்.

இதேபோன்று முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினத்தை தேர்தல் பிரிவுச் செயலாளராகவும், முன்னாள் எம்.எல்.ஏ  ராஜலட்சுமியை மகளிர் அணிச் செயலாளராகவும்,

இமாக்குலின் ஷர்மிளியை மகளிர் அணி இணைச் செயலாளராகவும், இந்திரா ஈஷ்வரை மகளிர் அணி துணைச் செயலாளராகவும் நியமித்துள்ளார்.

டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் மருத்துவ அணிச் செயலாளராகவும்,

திருவாலங்காடு பிரவீன் மாணவர் அணிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முத்துக்குமார் புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளராகவும், அமலன் சாம்ராஜ் பிரபாகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோன்று திண்டுக்கல் மேற்கு, கிழக்கு தெற்கு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செயலாளர்களையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.

கலை.ரா

‘ரூட் தலை’க்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!

அமலுக்கு வந்தது போலி பத்திரப் பதிவு ரத்து திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel