அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதித்த தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. OPS appeal adjourned in high court
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார்,
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸுக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி உத்தரவிட்டார்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷெரீஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இன்னும் வெளியிடப்படவில்லை.
எனவே தனிநீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை பட்டியலிட நீதிமன்ற பதிவருக்கு உத்தரவிட்டு, ஓபிஎஸின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர முடியாது. கட்சி சார்பாக மட்டுமே வழக்கு தொடர முடியும்.
கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஏற்கனவே இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.
இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்காலத் தடை விதித்தது தவறு” என்று வாதிடப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். OPS appeal adjourned in high court
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பத்து மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது!
வங்கக்கடலில் உருவாகிறது ‘மிதிலி’ புயல்: தமிழகத்திற்கு மழை இருக்கா?