ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் நாளை தீர்ப்பு!

Published On:

| By Kavi

அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு எதிரான தேர்தல் வழக்கில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

அவர் தாக்கல் செய்த மனுவில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மிலானி தொடர்ந்த வழக்கை ஏற்கக் கூடாது என்று ரவீந்திரநாத் எம்.பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இவ்வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணையின் போது ஏற்கனவே மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நீதிபதி கேட்டிருந்தார்.

அதுதொடர்பாக ஆவணங்களை சமர்பிக்க தயாராக இருப்பதாக ரவீந்திரநாத் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, தன் தரப்பு விளக்கத்தை கேட்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை நீதிபதி ஏற்றுக்கொண்டு ரவீந்திரநாத் குமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த ஜூன் 28ஆம் தேதி நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். தனது தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் கேட்ட கேள்விகளுக்கு சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார் ரவீந்திரநாத் எம்.பி.

பின்னர் மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் வி.அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார்.

அதிகார துஷ்பிரயோகம், ஆவணங்களில் திருத்தம், சொத்து விவரங்களை முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை மறுத்து மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக நின்றபடியே விளக்கமளித்தார் ரவீந்திரநாத் எம்.பி.

இந்நிலையில் இவ்வழக்கு நாளை மதியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கில் மதியம் 2.15 மணிக்கு நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்குகிறார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share