ஆன்லைன் ரம்மி தொடர்பான தடைச்சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததில் எந்த தவறும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அண்ணாமலை கூறுவதற்கு முன்பாகவே நானே இந்த விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என்பதை சொல்லி இருந்தேன். அதற்கான காரணத்தை பாதி மறைத்து அண்ணாமலை கூறியுள்ளார்.
அவசர சட்டம் 3 தேதி பிறப்பிக்கப்படுகிறது. அன்று மாலை ஆளுநர் கையெழுத்திட்டார். 4ஆம் தேதி அரசு இதழில் வெளியிடப்பட்டது. 5 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அதன் பின்பு அரசாணை வெளியிட முடியாது. அது மட்டும் இன்றி அரசாணை வெளியிட்டால் இதற்கு யாரேனும் தடை கோரி விடுவார்கள் என்பதாலும் சட்டமன்றத்திலேயே இதற்கான ஒப்புதலை பெற்று விடலாம் என்பதால்தான் அரசாணை வெளியிடவில்லை.
வேறு எந்த காலதாமதத்தையும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு செய்யவில்லை. எனவே ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான அரசாணை வெளியிடாதது தவறில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவிற்கே இது ஒரு முன்மாதிரியான சட்டம்.
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குமுறைபடுத்துதல் சட்டத்தை சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டு நாங்கள் கொண்டு வந்தோம்.
இதற்கான அனைத்து விதமான முறையான விதிமுறைகளை பின்பற்றி தான் சட்டமும் இயற்றப்பட்டு அரசு இதழிலும் வெளியிடப்பட்டது. ஆளுநரை நாங்கள் குறை சொல்லவில்லை காலதாமதப்படுத்துகிறார் என்று தான் சொல்லி இருந்தோம்.
அதன்பின் ஆளுநரை நான் போய் பார்த்தேன். அவர் சந்தேகம் கேட்டார் விளக்கம் சொன்னேன். இந்த விவகாரத்தில் நிச்சயம் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
கலை.ரா
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை தோலுரிக்கும் விட்னஸ்: டிசம்பர் 9 ரிலீஸ்!
ஆணாதிக்கம் நிறைந்ததா கட்டா குஸ்தி: ஒரு பார்வை!