”ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்” : கீதாஜீவன்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளார்களுக்கு நேற்று (மார்ச் 12) அவர் அளித்த பேட்டியில்,
“தமிழக அரசு வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பிச்சைப்போடுவதாக இழிவுபடுத்தி பேசியுள்ளார் குஷ்பு. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்க்கை நிலை, வாழ்வாதாரம் தெரியாமல்அவர் இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. குஷ்புவின் வாழ்க்கை முறை என்னவென்று நமக்குத் தெரியும். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை. நிச்சயமாக ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றி அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.
பெண்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று அந்த அம்மா சொல்கிறார், 1989இல் சொத்துரிமை, கல்வி உரிமை கொடுத்து பொருளாதார சுதந்திரம் அளித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
அதனை எதிர்த்து பேச இந்தியாவில் ஒருத்தரும் கிடையாது. அதன் பிறகு தான் இந்திய அளவில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கான உரிமைக்கு அடித்தளமிட்டது திமுக.
எந்த மாநிலமும் இந்திய அளவில் அளிக்காத பொருளாதார சுதந்திரத்தை பெண்களுக்கு கொடுத்தது திமுக. மகளிர் உரிமைத்தொகையான ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நிலை அறியாமல், பெண்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள், எந்த அளவிற்கு இந்த பணம் உபயோகப்படுகிறது என தெரியாமல் பேசி இருக்கிறார் குஷ்பு. வரும் மக்களவைத் தேர்தலில் ஒரு கோடியே 16 இலட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்” என்று கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சமூகவலைதள பக்கங்களிலும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/geethajeevandmk/status/1767570704927703162
அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அத ரெண்டு மணிக்கு தான் கேப்பியா? : அப்டேட் குமாரு
விஜய்யின் கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் மகன்!