அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தொடர்ந்த மனுக்களை நீதிபதி குமரேஷ் பாபு மார்ச் 28-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்கு பின் முரணாக உள்ளதாகவும், அதிமுக கட்சி விதிகள் மீறப்பட்டுள்ளதை நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிபதி மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது,
தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரப்பட்டது. அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவரும் தாங்கள் தொடர்ந்த வழக்குகளையும் ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
நீலகிரி கோடை விழா: எந்தெந்த தேதிகளில் என்னென்ன கண்காட்சிகள்?