தாய் மரணமடைந்த சோகம் தாங்காமல் ஓ.பன்னீர்செல்வம் அவரது தாயின் கால்களைப் பிடித்து அழுதார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). கடந்த 23ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாகப் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை நேற்று (பிப்ரவரி 24) மருத்துவமனைக்குச் சென்று பார்த்து மருத்துவர்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்துக் கேட்டு அறிந்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது தாயார் நேற்று இரவு உயிரிழந்தார்.
தாயார் உயிரிழந்த தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு வந்தார்.
அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தாயை பார்த்துக் கண்கலங்கி நின்றார் ஓ.பன்னீர்செல்வம்.
பின்னர் அவரது தாயாரின் கால்களைப் பிடித்துக் கொண்டு சோகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்.
ஓ.பன்னீர்செல்வம் தாயாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,
”முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அவரது மறைவால் வாடும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு சசிகலா, ”அன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை : பிரச்சாரத்தில் முதல்வர் கொடுத்த அப்டேட்!