ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி இயங்குமா? மா.சு தகவல்!
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இயங்குவதற்கு தடை இல்லை என NMC நிறுவனம் மருத்துவ குழு அறிக்கை அனுப்பியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வரும் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும் இதனை தொடர்ந்து கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் திறந்ததன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மத்திய அரசால் கடந்த மாதம் மருத்துவ இடங்களுக்கு பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு ஒரு வரைவு அனுப்பப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி அவரின் அறிவுறுத்தலின் பேரில் துறையின் செயலாளர் மூலம் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவமனை மருத்துவம் தொடர்பான கொள்கைகளில் அதன் மீது சட்டம் இயற்றுவது என்பது மாநிலத்தின் உரிமை சார்ந்தது. மாநில அரசின் திறனை தடுக்கும் பின் தங்கிய மக்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு தடையாக இருக்கும் எனவே மருத்துவ பொது கவுன்சில் திட்டத்தை எதிர்த்து மாநில அரசன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
மாநில அரசுகளே கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம் என இன்றைக்கு மத்திய அரசு நமக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மாநில உரிமைகள் காக்கப்பட்டுள்ளது மருத்துவம் தொடர்பான விஷயத்தில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதற்காக முயற்சி எடுத்து உள்ள முதலமைச்சரின் நடவடிக்கைக்கும் முதலமைச்சருக்கும் மருத்துவ மாணவர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்து அதில் சிசிடிவி கேமரா பயோமெட்ரிக் என்கின்ற வகையில் சிறிய குறைபாடுகள் இருப்பதாக சொல்லி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி திருச்சி மருத்துவக் கல்லூரி தர்மபுரி ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என என் எம் சி மருத்துவக் குழு அறிக்கை அனுப்பியிருந்தது
உடனடியாக மருத்துவத்துறையினரிடம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி மருத்துவத்துறை குழுவை டெல்லிக்கு அனுப்பி வைத்து என் எம் சி குழுவிடம் விளக்கம் தரப்பட்டது. அவர்கள் சொன்ன சிசிடிவி கேமரா மற்றும் பயோ மெட்ரிக் குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது இதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது
மீண்டும் என் எம் சி குழு மருத்துவ கல்லூரிகளில் நேரடி கள ஆய்வு மற்றும் காணொளி மூலம் ஆய்வு நடத்தி ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அவர்கள் அளித்த அறிக்கையை திரும்ப பெற்றுள்ளனர். மேலும் ஐந்து ஆண்டுகள் மருத்துவகல்லூரி இயங்குவதற்கு தடை இல்லை என அறிக்கை அனுப்பி உள்ளனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “திருச்சி மருத்துவக் கல்லூரியில் நாளை காணொளி வாயிலாக ஆய்வு நடத்தப்பட உள்ளது அது முடிந்தவுடன் அதற்கும் தீர்வு கிடைத்துவிடும்.
பத்திரிகை ஊடகத்துறையிலும் அரசியல் தலைவர்களும் மருத்துவ கல்லூரிகள் மூடப்பட்டது போல பிரம்மாண்ட மாயை உருவாக்கி வந்தனர். தர்மபுரி மருத்துவ கல்லூரியும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியும் இயங்குவதற்கு தடை இல்லை என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதை வைத்து அரசியல் செய்து உள்ளவர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக ஆர் சி எச் என்ற அடிப்படையில் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணி செய்து வருகின்றனர். குழந்தைகள் நல பணியாளர்கள் என்கின்ற பெயரோடு ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப பணியமர்த்தப்பட்டனர்.
அவர் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிச் முறை என்ற அடிப்படையில் 1500 ரூபாய் சம்பளத்திற்கு 2000 வரை பணி நியமனம் செய்துகொண்டனர். தமிழகம் முழுவதும் அந்த பணியாளர்கள் மூலம் தொடர்ச்சியாக கோரிக்கை மனுக்கள் எங்களுக்கு அளித்து வந்தனர். 1500 ரூபாய் சம்பளம் என்பது போதுமான ஊதியம் இல்லை என்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். முதலமைச்சர் அவர்களுக்கு கூடுதலான சம்பளத்துடன் கூடிய பணியை வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தத் துறையில் 878 மருத்துவ பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 878 பணியிடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு ஆர் சி எச் அடிப்படையான இந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.
இப்படி அவர்கள் பணியில் அமர்த்தப்படும் போது இனிமேல் அவர்களுக்கு மாதத்திற்கு 15000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் 10 மடங்கு சம்பள உயர்வு என்பது முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், 2000 பேருக்கு மேல் ஆர் சி ஹச் பணியாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் தற்போது 878 பேர்தான் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப இருக்கிறோம். மீதி இருக்கிறவர்கள் ஏற்கனவே இருக்கிற பணிகளில் தொடர்வார்கள்.
இனிவரும் காலங்களில் காலி பணியிடங்கள் இருந்தால் அவர்களும் நிரப்பப்படுவார்கள் என்றும் 15 ஆம் தேதி குடியரசு தலைவர் வருவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். 15ஆம் தேதி திறப்பதற்கு கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு: நாளை ஒத்திவைப்பு!
துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் அழுத்தம்: பொன்முடி குற்றச்சாட்டு!