விலைவாசி விண்ணை முட்டும் நிலையில் நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். nirmala sitharaman set new record
இந்திய வரலாற்றில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இன்று தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 1959 முதல் 1969 கால கட்டத்தில் நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் மொத்தம் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இருவரும் தொடர்ச்சியாக இன்றி வெவ்வேறு கால கட்டங்களில் பட்ஜெட் தாக்கல் செய்தனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜியும் 8 முறையும், மறைந்த முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 1991 முதல் 1995ஆம் ஆண்டு வரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
அந்த வரிசையில் தொடர்ச்சியாக 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை இன்று பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.
இனிப்பு ஊட்டிய குடியரசுத்தலைவர்! nirmala sitharaman set new record

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சகத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு புறப்பட்ட நிர்மலா சீதாராமன், முதலில் குடியரசு தலைவரை சந்தித்தார். அப்போது அவருக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் திரெளபதி முர்மு.

அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.