தமிழ்நாடு பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த மூத்த பிரமுகர் கே. டி. ராகவன் கடந்த ஒரு வருட காலமாகவே தீவிர அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருக்கிறார்.
விரும்பத்தகாத ஒரு சர்ச்சையை ஒட்டி அவர் பதவி விலக நேரிட்டது அரசியல் வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாகவும் இதய பிரச்சினை தொடர்பாகவும் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த வாரம் இதே மருத்துவமனையில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிகிச்சை பெற்று வந்த போது அவரை சந்திக்க சென்றார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
அப்போது ராகவன் அங்கே சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து அவரையும் சந்தித்து நலம் விசாரித்து விட்டு சென்றார்.
பாஜக பிரமுகர்களான பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகன் போன்றவர்கள் ராகவனை நலம் விசாரித்து சென்றார்கள்.
இந்த நிலையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(ஏப்ரல் 1) காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று கே. டி. ராகவனை சந்தித்தார்.
மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்று வரும் ராகவனை சந்தித்து பத்து முதல் 15 நிமிடங்கள் ராகவனும் நிர்மலா சீதாராமனும் மட்டும் உரையாடி இருக்கிறார்கள்.
இந்த சந்திப்பு மனிதாபிமான அடிப்படையில் தான் என்றாலும் நிர்மலா சீதாராமனும் கே.டி. ராகவனும் சந்தித்து உரையாடியது தமிழக பாஜகவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
வேந்தன்
விடுதலை படத்திற்கு அனுமதி மறுப்பா? காவல்துறையினருடன் வளர்மதி வாக்குவாதம்!