தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.
ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து நீட் தேர்வு விலக்குக்கு எதிரான கருத்துகளை கூறிவருகிறார்.
கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்விலும், நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஆளுநர் பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் என்பவர் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக இளைஞர் அணி, மருத்துவ அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போர் நடத்த உள்ளோம்.
அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது.
செல்வசேகரின் திருவுடலுக்கு மரியாதை செய்யச் சென்றபோது, யாரை தேற்றுவது, யாருக்கு ஆறுதல் சொல்வதென்று கேட்கும் அளவுக்கு அங்கு எல்லோரும் சோகத்தில் உறைந்திருந்தார்கள். நமக்கே அங்கு ஆறுதல் தேவை என்ற நிலைதான் இருந்தது.
இந்த மரணங்கள் அனைத்துக்கும், மத்திய பாஜக அரசும், அதிமுகவினரும் , நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம். ஒட்டுமொத்த தமிழக மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை.
“நீட் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன்” என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்காரச் சொல்கிறார்.
இத்தனைக்கும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய அம்மாசியப்பன் ராமசாமியின் மகள் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள், பயிற்சி மையம் சென்று லட்சங்கள் செலவு செய்து தேர்வில் வென்றவர்கள்கூட நீட்டை எதிர்க்கிறார்கள்.
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் எப்படி அதில் கையெழுத்திட முடியும்? மறைந்த முதல்வர் கலைஞரின் ஆட்சியின் போது, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியின் போது தமிழகத்துக்குள் வந்தது.
நீட் விலக்குக்காக 2017-ம் ஆண்டு அதிமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, குடியரசுத்தலைவர் நிராகரித்ததை, 21 மாதங்கள் வரை, தமிழக சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் அதிமுகவினர் மறைத்தனர். மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியபோதுதான், அது தமிழகத்துக்கே தெரியவந்தது.
இப்படிப்பட்ட துரோக வரலாற்றைக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுகவினருக்கோ நம்மை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்புகிற இயக்கமாக நம்முடைய திமுக இருந்து வருகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. ஒரு மாநில அரசால் நீட்டை ரத்து செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும், முதல்வர் மேற்கொண்டு வருகிறார். மே 2021-ல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே, ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் பாதகங்கள் குறித்து ஆராயச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரிடம், ஒப்புதல் வழங்கும்படி பல்வேறு தருணங்களில் முதல்வர் வலியுறுத்தி வந்தார். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரியும் அக்டோபர் 4, 2021 அன்று, 12 மாநில முதல்வர்களுக்கு நம் தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் 27 -ஆம் தேதியன்று, முதல்வர் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமன்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார்.
தமிழக முதல்வரின் தொடர் அழுத்தம், பிற அரசியல் கட்சிகளின் அழுத்தம், பொதுமக்கள், மாணவர் இயக்கங்களின் போராட்டத்தின் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2, 2022 அன்று நீட் விலக்கு மசோதாவினை ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து, ஆலோசிப்பதற்காக முதல்வர் தலைமையில், பிப்ரவரி 5, 2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி, மார்ச் 15, 2022 அன்று முதல்வர் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், மீண்டும் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரை ஏப்ரல் 22, 2022 அன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், நேரில் சந்தித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி மே 5, 2022 அன்று அனுப்பி வைத்தார்.
இப்படி தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு ஒருபுறம் எடுத்து வருவதும், ஆளுநர் அதனைத் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், நீட் பிரச்சினையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர். பிரதமர் தமிழகம் வருகிற போதும், முதல்வர் டெல்லி செல்கிற போதும், பிரதமரிடம் வைக்கப்படும் முதல் கோரிக்கையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோருவதுதான்.
திமுக இளைஞர் அணி செயலாளர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், மோடியை டெல்லியில் பிப்ரவரி 28, 2023 அன்று சந்தித்தார். அப்போதுகூட, பிரதமரிடம், நீட் ஒழிப்பைத்தான் வலியுறுத்தினார். இப்படித் தமிழக அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் மத்திய பாஜக அரசு அதனைப் பொருட்படுத்துவதே கிடையாது. இந்த நேரத்தில் மாணவச்செல்வங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது.
தமிழக முதல்வர் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம். எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும், இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழகமெங்கும் நடைபெறவுள்ளது.
இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, தமிழகத்தில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம். நீட் தேர்வை ஒழித்து, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையும், விலைமதிப்பில்லா உயிரையும் காக்க ஓரணியில் திரள்வோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மதுரையில் அதிமுக மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில் இந்த உண்ணாவிரத போராட்டம் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“நம்ம கார்ல ஏத்துப்பா” : விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஆ.ராசா
குறைந்த விலையில் ஓலா எலக்ட்ரிக் இருசக்கர வாகனம்!
திருடுபோன செல்போன் : இனி ஈசியா கண்டுபிடிக்கலாம் – வழிமுறைகள் இதோ!