நல்லகண்ணு அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை வைத்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (டிசம்பர் 30) பதில் அளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பழ.நெடுமாறன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “சிவப்பு சிந்தனையும், வாழ்வியலும், நம் வரலாறும் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர வேண்டும். தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி பாடப் புத்தகங்களில் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரோடு நான் பழகிய நாட்கள் மிகக் குறைவாக இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்” என்று பேசியிருந்தார்.
விஜய் சேதுபதியின் பேச்சும் அவர் முன்வைத்த கோரிக்கையும் கவனம் பெற்ற நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பதில் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 : ஸ்டாலினுக்கு ராமதாஸ், முத்தரசன் வலியுறுத்தல்!