கோட்சே குறித்த பதிவுக்கு திமுகவுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளது.
“சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. இவர் மூலமாக புல் புல் சாவர்க்கரின் சதித்திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியை படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்” என்று திமுக ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் நேற்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 23) அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “
“தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக-வின் ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து உள்நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் கலவரத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும் வகையிலும் 22.9.2023 அன்று பதிவு வெளியிட்டுள்ளனர்.
1948-ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட போது அரசியல் காரணங்களுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது.
இது குறித்து விசாரிக்க 1966-ல் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.எல்.கபூர் கமிஷன் 407 ஆவணங்கள் 101 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை, இந்த கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதை மறைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2014-ல் மும்பை தானேவில் நடந்த கூட்டத்தில் இதே குற்றச்சாட்டை கூறினார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 25.8.2016-ல் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேசவில்லை என்று கூறி பின்வாங்கினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜீன் சிங் ஆகியோரும் இதேபோல பேசி, பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நம்பும் திமுகவின் ஐடி விங்க், தற்போது விஷமத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தியுள்ளதோடு, ஜனநாயக முறையில மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஒருவரின் தலைமையில் செயல்படும் திமுக ஐடி விங்கின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது.
மக்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் உள்ள இந்தப் பதிவை உடனே நீக்குவதோடு திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், திமுக ஐடி விங்க் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அந்த பதிவு நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த அயலான் படக்குழு!
என் கணவருடன் பாக்ஸிங் செய்யத் தயாரா? சீமானுக்கு சவால் விட்ட வீரலட்சுமி