டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். Mutharasan was arrested
டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி 11 காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி டாஸ்மாக் பணியாளர்கள் பேரணி செல்வார்கள் என்று ஏஐடியூசியின் துணைத்தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருமான முத்தரசன் அறிவித்தார்.
அதன்படி இன்று (பிப்ரவரி 11) காலை எழும்பூருக்கு டாஸ்மாக் பணியாளர்கள் வருகைத் தர தொடங்கினர். பின்னர் முத்தரசன் தலைமையில் பேரணியாக செல்ல அனைவரும் தயாராகினர்.
அப்போது பேசிய முத்தரசன், “தொழிலாளர்களை காட்டிலும் இங்கு போலீசார் அதிகமாக இருக்கின்றனர். உங்களுக்கு வேறு வேலை இல்லையா? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எல்லாம் கெட்டு போய்விட்டது என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். அதைதவிர்த்து எல்லோரையும் இங்கு கொண்டு வந்து நிறுத்தினால்… என்ன செய்ய போகிறார்கள்.
எல்லோரும் கைதாக சொன்னால், கைதாக போகிறார்கள். இங்கு யாரும் வன்முறையாளர்கள் கிடையாது. அறவழியில் போராட்டம் நடத்த வந்திருக்கிறோம். அதற்கே பயமுறுத்துவது போல் இவ்வளவு போலீஸ் வந்திருக்கிறார்கள்.

இதுபோல எத்தனை போலீஸை, எத்தனை பேருந்துகளை பார்த்திருக்கிறோம். கைது செய்யுங்கள்…” என்று ஆவேசமாக கூறினார்.
அவர் பேசி முடித்ததும் டாஸ்மாக் ஊழியர்கள் கோஷம் எழுப்பிய நிலையில், பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்து, ஏற்கனவே கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்ட பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
திமுக கூட்டணி கட்சி மாநில செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. Mutharasan was arrested