சேலத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்திய 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பேராசிரியர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 11) சேலத்திற்கு வந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கு எதிராக திமுக, திராவிடர் இயக்கம் உள்ளிட்ட மாணவர் இயக்கங்கள் காலை முதல் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநருக்கு எதிராகவும், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் பல்கலைக்கழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது சுமார் 1 மணியளவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
Comments are closed.