பாலம் அறுந்து விழுந்த விபத்தில் சிக்கி காயமடைந்து மோர்பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை பிரதமர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
குஜராத்தின் மோர்பியில் மச்சு ஆற்றின் மீது ஞாயிற்றுக்கிழமை தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்ததை அடுத்து, நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று(நவம்பர் 1) மோர்பிக்கு வந்தார்.
ஆற்றில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டு மோர்பி சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீட்பு பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கினர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், இந்த துயரமான நேரத்தில் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக பாலம் அறுந்து விழுந்த இடத்தை பார்வையிட்டு, சிவில் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்த பின் மோர்பியில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு பிரதமர் சென்றார்.
அங்கு மூத்த அதிகாரிகளுடன் பாலம் விபத்து குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் அடையாளம் காணும் விரிவான விசாரணையை நடத்துவது காலத்தின் தேவை என்று அவர் அறிவுறுத்தினார்.
மேலும் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் 26 குடும்ப உறுப்பினர்களை பிரதமர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலம் விழுந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் நேரு
அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை கைது!