ஜப்பான் நாட்டின் நீண்டகால பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. இவர் அங்குள்ள நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக நாடுகளை பெரும் கவலையடையச்செய்தது. பிரதமர் மோடி உட்பட உலகத்தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
பின்னர் இவரது இறுதிச்சடங்கு ஜூலை 12 ஆம் தேதி டோக்கியோவில் நடந்தது.
ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 27) ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 26 ) ஜப்பான் செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்துப் பேச உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கு வந்த அபே ’இரு கடல்களின் சங்கமம்’ என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இது இந்திய-பசிபிக் உறவுகளுக்கான அடித்தளம் என்று கூறப்பட்டது.
பின்னர், 2015 ஆம் ஆண்டு 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த அபே, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மூன்று நாட்களுக்கு கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை