காஷ்மீர் மக்களை கஷ்டப்பட விட மாட்டேன் : மோடி பிரச்சாரம்!

Published On:

| By Minnambalam Login1

modi srinagar jk

பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-ஈ-kaaஷ்மீர் விளையாட்டு அரங்கத்தில், பாஜக வேட்பாளர்களுக்காகத் தேர்தல் பரப்புரையில் இன்று(செப்டம்பர் 19) ஈடுபட்டார்.

ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டமாக நடந்துவருகிறது.  முதல் கட்ட தேர்தல்  நேற்று(செப்டம்பர் 18) நடைபெற்றது. இதில் 24 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாக்களித்தனர். 61% சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ஆம் தேதியும் நடக்கவுள்ள நிலையில், இன்று ஸ்ரீநகருக்குச் வந்த பிரதமர் மோடி, ஷேர்-ஈ-கஷ்மீர் விளையாட்டு அரங்கில் இன்று மதியம் உரையாற்றினார்.

அங்கு வந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு தனது உரையை ஆரம்பித்த மோடி, “முதல் கட்ட தேர்தலில் மக்கள் அலை அலையாக வந்து, தீவிரவாதத்தையும் , கல் எறிவதையும் ஆதரிக்கும் கட்சிகளுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். ‘பாதுகாப்பான மற்றும் வளமான காஷ்மீர்’ என்ற மோடியின் உத்தரவாதத்தின் மீது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இங்குள்ள மக்களுக்கு உள்ளுரிலையே வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். இனிமேலும் காந்தி, அப்துல்லா, மற்றும் முஃப்திக் குடும்பத்தினர் உங்களை கஷ்டப்படுத்த அனுமதிக்க மாட்டேன்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் முன்பு போல்  மூடப்பட்டிருக்காமல், எப்போதும் போல் இயங்கி வருகிறது.

இளைஞர்களின் கைகளில் கற்களுக்குப் பதிலாக பேனாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் தீ பற்றி எறிகிறது போன்ற செய்திகளுக்குப் பதிலாக எய்ம்ஸ், ஐஐடி-கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன போன்ற செய்திகள் தான் நமது காதுகளில் அண்மைக் காலமாகக் கேட்கிறது.

முதல் முறையாக எந்த வன்முறையும் இல்லாமல் தேர்தல் நடித்துள்ளது. புதிய வரலாற்றை ஜம்மு காஷ்மீர் மக்கள் படைக்கப்போகிறார்கள்” என்றார்.

ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து குறித்து “ பாஜக அளித்த வாக்கின் படி  ஜம்மு காஷ்மீர்க்குத் திரும்பவும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அமைதியான காஷ்மீரை தான் பாஜக உருவாக்க நினைக்கிறது.” என்று மோடி பேசினார்.

மேலும் “ காங்கிரஸ், நேஷ்னல் கான்ஃபிரன்ஸ்(National Conference) மற்றும் பிடிபி (PDP) கட்சியினர் தங்களின் சொந்த ஆதாயத்திற்காக ஜனநாயகத்தை இதுவரை நசுக்கி வந்தார்கள்.

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அரசியலில் முன்னுக்கு வர இவர்கள் விரும்பவில்லை. இதனால் ஜனநாயகத்தின் மீது இருந்த நம்பிக்கையை இங்கு இருக்கும் இளைஞர்கள் இழந்தார்கள்.

ஆனால் இப்போது அந்த நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரையில் யாராலும் ஈடுப்பட முடியாது. இதனால் காங்கிரஸ், நேஷ்னல் கான்ஃபிரன்ஸ்(National Conference) மற்றும் பிடிபி (PDP) கட்சியினர் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இன்றோ இரவில் கூட தேர்தல் பரப்புரை மேற்கொள்ள முடிகிறது. மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டாடுகிறார்கள். இளைஞர்கள் மீண்டும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் வாக்கு, மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று முழுமையாக நம்புகிறார்கள்” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டதிற்கு பின்பு, பிரதமர் மோடி இன்று தான் காஷ்மீருக்கு முதல் முறையாக வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரபல யூடியூபர் டேன்மே பட் எடை குறைத்தது எப்படி? ஆச்சரியத் தகவல்கள்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… தா.மோ.அன்பரசன் சொன்ன முக்கிய தகவல்!

பணிச்சுமையால் பெண் இறப்பா?: மத்திய அரசு விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share