சிங்கப்பூர் முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை!

Published On:

| By christopher

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 24) காலையிலேயே அங்குள்ள முக்கிய நிறுவனங்களுடன் தொழில் முதலீடு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி நேற்று சிங்கப்பூர் சென்ற அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையிலேயே டெமாசெக், செம்ப்கார்ப் உள்ளிட்ட நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

டமாசெக் நிறுவன சிஇஓ தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா (வலது)

அதன்படி முதலில் சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் (Temasek) நிறுவனத்தின் சிஇஓ தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தும்,  சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் சிஇஓ கிம்யின் வாங் மற்றும் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் சிஇஓ சஞ்சீவ் தாஸ்குப்தாவையும் தனித்தனியாக சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் கோட் சூட் அணிந்தபடி முதலீடுகள் குறித்து ஆலோசனை செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

மேலும் இந்த சந்திப்பில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளார் இறையன்பு, சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் ஆகியோருடன் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஐபிஎல் தொடரில் மீண்டும் தோனி?: அவரே அளித்த அட்டகாசமான பதில்!

‘கொலை பண்றது ஒரு அடிக்‌ஷன்’: போர் தொழில் டீசர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel