இந்தி திணிப்புக்கு எதிராகப் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு, தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைத்தது.
இதற்குத் தென்மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
நேற்று (அக்டோபர் 15) திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் மத்தியப் பல்கலைக்கழகங்களில்
கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள் என்றும், இந்த அட்டவணையில் இன்னும் சில மொழிகளும் சேர்க்கப்பட வேண்டும்.
இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, இந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பும் தனித்துவமும் மொழிவழிப் பண்பாடும் இருக்கிறது.
இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஆக்கப்பட்டு, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது.
தமிழ் மட்டுமின்றி, அனைத்து மாநில மொழிகளின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாடு தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுத்து வருகிறது.
இந்திய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்ட அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, “இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலம் தொடர்ந்து அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கும்” என்று உறுதியளித்தார்.
1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில், அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதனடிப்படையில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, ஒன்றிய அரசுப் பணிகளில்,
ஆங்கிலம் மற்றும் இந்தி என இரு மொழிகளையும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலைப்பாடு தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் நீடிக்க வேண்டும்.
இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. அவை நாட்டினை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை.
இது இந்தி பேசாத மக்களைப் பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போலப் பிரித்தாளுகின்ற தன்மை கொண்டவை. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல;
தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் ஏற்புடையதாக இருக்காது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.
அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.
‘ஒரே நாடு’ என்ற பெயரில், இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள், பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதைச் சிதைப்பதோடு, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும் என நான் அஞ்சுகிறேன்.
அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு, தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும், அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும்,
அனைத்து மொழிகளைப் பேசுவோருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் ஒன்றிய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமைவாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
”இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை” : நீர்மலா சீதாராமன்