திமுக பொதுக்குழுவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.
இன்று (அக்டோபர் 9) சென்னையில் திமுக பொதுக்குழுவில் திமுக தலைவரான ஸ்டாலின் பேசும்போது புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு எச்சரிக்கையும் செய்தார்.
“இந்த உட்கட்சித் தேர்தலில் பலர் பதவிக்காக போட்டியிட்டார்கள். இப்போது மாவட்டச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் ஏதோ தங்களைத் தவிர இந்த பொறுப்புக்கு வேறு யாரும் இல்லை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களைப் போலவே உழைக்க உங்களை விட சிறப்பாக தமிழினத்துக்கு உழைக்க ஆயிரமாயிரம் லட்சம் நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்கள் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கான
வாய்ப்பு மறுக்கப்படவும் இல்லை… அவர்கள் மறக்கப்படவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நிர்வாகிகள் அல்லாதவர்களுக்குதான் அதிக பொறுப்பு இருக்கிறது.
பதவி கிடைத்தவர்ககளில் என்னுடைய இரக்கம் காரணமாக கூட சிலர் மீண்டும் இந்த பதவிக்கு வந்திருக்கலாம். முதன்மைச் செயலாளர் நேரு கூட சொன்னார், ‘தளபதி நீங்க ரொம்ப சாஃப்ட் ஆகிட்டீங்க’ என்று. அவர் சொன்னது மாதிரி சிலர் இரக்கம் காரணமாக தொடர அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.
சில மாவட்டச் செயலாளர்கள் தங்கள் நிர்வாகிகள் சிலரிடம் பேசிக் கொள்வது இல்லை என்று கூட கேள்விப்படுகிறேன். இதைவிட கட்சிக்கு துரோகம் வேறு எதுவும் இல்லை. கிளைச் செயலாளர் முதல் அனைவரது செயல்பாடுகளும் தலைமைக் கழகத்தால் கண்காணிக்கப்படும். நீங்களே உங்கள் பகுதிகளில் கூட்டங்கள் நடத்த வேண்டும். தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் கூட்டங்களை மட்டும் நடத்தினால் மட்டும் போதாது. நீங்களே நடத்த வேண்டும். இதற்கான மினிட்ஸ் புத்தகங்களை நானே தொடர்புகொண்டு எடுத்து வரச் சொல்லி பார்க்கப் போகிறேன். ஒவ்வொரு நிர்வாகிகளும் என் கண்காணிப்பின் கீழ்தான் இருப்பீர்கள்” என்று பேசி வருகிறார் ஸ்டாலின்.
–வேந்தன்