mk stalin speech in world Tamil diaspora day in Chennai
அயலக தமிழர் நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பாக மூன்றாவது ஆண்டாக அயலக தமிழர் நாள் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (ஜனவரி 11) தொடங்கியது. ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 2வது நாளாக நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார்.
அப்போது, “ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடுகளுக்கு வரும் போது எப்படி வரவேற்பீர்களோ, அதே போல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு 3வது முறையாக உங்களை இந்த அயலக தமிழர் நாளில் வரவேற்பதில் மகிழ்ச்சி.
எனக்கு உடல்நலமில்லை, நான் உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். அதை படித்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. எனக்கு என்ன குறை. தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதைவிட எனக்கு என்ன வேண்டும்.
நேற்று ஒரு வீடியோவில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசுவதை பார்த்தேன். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது, பொங்கல் பரிசு ரூ.1,000, அரிசி, சர்க்கரை, கரும்பு கிடைத்துவிட்டது. வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. ஒரு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரே கொடுத்து விட்டார். நான் பொங்கலுக்கு யாரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை என்று அந்த சகோதரி பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் முகத்தில் பார்க்கிற மகிழ்ச்சி தான் எனக்கான உற்சாக மருந்து. எனக்கு மக்களை பற்றித்தான் எப்போதும் நினைப்பே தவிர என்னை பற்றி எப்போதும் இருந்ததில்லை. எந்த சூழலிலும் மக்களுடன் இருப்பவன் நான். என் சக்தியை மீறி இது போன்ற செய்திகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு உழைத்துக் கொண்டே இருப்பேன்.
அண்மையில் இதே அரங்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னார்கள். இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு. இந்த மாநாட்டிற்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் வருகை தந்திருப்பது.
அவர் உலக புகழ்பெற்ற தமிழர் மட்டுமல்ல. உலகமே கவனிக்கிற பதவியில் இருக்கும் தமிழர். அவரை போலவே இந்த மேடையில் உலகம் முழுவதும் இருக்க கூடிய பல நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் அறிவால், ஆற்றலால், தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்குச் சாட்சியாக அமர்ந்திருக்க கூடிய அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன்.
’முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற உழைப்பு திறன் தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழ காரணம். இப்படி புலம் பெயர்ந்த தமிழ் சொந்தங்கள் அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கின்றவர்கள்.
2010 ஆம் ஆண்டு கலைஞர் வெளிநாடு வாழ் தமிழர்களின் துயரங்களை களைய வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவை உருவாக்கி அரசாணை வெளியிட்டதோடு வாரியம் அமைக்கவும் சட்டமுன்வடிவு வெளியிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக இந்த முயற்சியில் தடை ஏற்பட்டது.
ஆனால் இப்போது அமைந்திருக்க கூடிய ஆட்சியில் அயலக தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு துறையை அமைத்து அமைச்சரை நியமித்து உங்களது அவசர தேவைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.
நீராலும், நிலத்தாலும், நாடுகளாலும், கண்டங்களாலும் நாம் பிரிந்திருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள். அந்த உரிமையோடு ஒரு சகோதரனாக நான் உங்கள் அனைவரிடமும் வைக்கும் வேண்டுகோள், எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள். கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களை காட்டுங்கள். தமிழோடு இணைந்திருங்கள்” என்று பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
டிஜிபிக்கே பெப்பே… 9 மெமோக்களை ஊதித் தள்ளிய இன்ஸ்பெக்டர்- சுழலும் ஆடியோ சர்ச்சை!
“ஹிந்தி தெரியாது போயா”: கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ டீசர் இதோ!
mk stalin speech in world Tamil diaspora day in Chennai